Insurance Asia Awards 2022 இல் இரட்டை கௌரவம் பெற்ற ஜனசக்தி லைஃப்

இன்சூரன்ஸ் ஆசியா விருதுகள் 2022 மூலம், இவ்வருடத்தின் உள்நாட்டு காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி லைஃப் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, ஜனசக்தி லைஃப் கையடக்கத் தொலைபேசி செயலியானது வருடத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வெளியீடான Insurance Asia நிறுவனத்தினால் இவ்விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Insurance Asia Awards (காப்புறுதி ஆசியா விருதுகள்) ஆனது, பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறந்த காப்புறுதி நிறுவனங்களுக்கான ஆசிய பசிபிக்கின் மிகவும் பாராட்டுக்குரிய விருதுகள் திட்டமாக அறியப்படுகிறது. இந்த கௌரவிப்பானது, காப்புறுதித் துறையில் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரமாக பரவலாகக் கருதப்படுவதோடு, மிக இறுக்கமான ஆய்வு மற்றும் தெரிவு செய்தல் செயன்முறையை இது உள்ளடக்கியுள்ளது.

இந்த சாதனை தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரமானது, எமது காப்புறுதிதாரர்களுக்கு நாம் சிறந்த நுகர்வோர் பெறுமதியையும் ஈடுபாட்டையும் வழங்கி, எமது நோக்கத்தைப் பேணி அதன் மூலம் சேவையை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது தற்போதுள்ள விரிவாக்கம் மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு தொழில்துறையில் சிறந்த தீர்வுகளுடன் தொடர்ந்து சேவை செய்வது தொடர்பான எதிர்கால சாத்தியம் பற்றி எடுத்துக் காட்டுகிறது. இது எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், நாம் எதிர்கொண்ட சவாலான ஆண்டிற்கு மத்தியில், எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அபரிமிதமான பங்களிப்பை வழங்கிய எமது சிங்கப் படையின் திறனுக்கும் ஒரு சான்றாகும்.” என்றார்.

‘Mobile App of the Year’ (வருடத்தின் கையடக்கத் தொலைபேசி செயலி) இற்கான விருதையும் ஜனசக்தி லைஃப் வென்றுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு, காப்புறுதிதாரர்களின் இணைப்பு, காப்புறுதி சேவைகள் மற்றும் காப்புறுதியை பெறுதல் ஆகியன தொடர்பான சிறந்த வாடிக்கையாளர் இடைமுகம் உள்ளிட்ட நிறுவனம் முழுவதும் காணப்படும் அனைத்து இடைமுகங்களுக்கும் புத்தாக்கமான நிதித் தீர்வுகளை வழங்குகிறது.

ஜனசக்தி குழுமத்தின் பிரதம தகவல் தொழில்நுட்ப அதிகாரி கே.வி. குகநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனசக்தி லைஃப் புத்தாக்கத்துடனான மாற்றத்திற்கு முன்னோடியாக உள்ளதோடு, ஆயுள் காப்புறுதித் துறையில் அதிக அணுகல்தன்மையுடன், அது தொடர்பான செயன்முறைகளை எளிதாக்குவதற்காக டிஜிட்டல் மாற்ற மூலோபாயத்தை பின்பற்றுகிறது. சேவைச் சிறப்பையும் வசதியையும் வழங்குவதற்காக டிஜிட்டல் மயமாக்கலின் சக்தியை நாம் உறுதியாக நம்புகிறோம். எமது காப்புறுதிதாரர்களின் வளர்ந்து வரும் தேவைகளை உணர்ந்து, உயர்ந்த தரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கான எமது குழுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இதுவாகும்” என்றார்.

வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல் ஆகிய தனது கூட்டாண்மை நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, ஜனசக்தி லைஃப் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நெறிமுறையான மற்றும் வெளிப்படையான முறையில் பெறுமதியான சேவையை வழங்க எப்போதும் பாடுபட்டு வருகிறது. வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தி, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் காப்பீட்டாளரால் இது உயிர்ப்பிக்கப்படுகின்றது. இந்த நோக்கத்தை தனது ஊழியர்களுடனான தனது ஈடுபாட்டிற்கு விரிவுபடுத்தும் வகையில், ஜனசக்தி லைஃப் எப்போதும் தனது குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்த்துக்கொள்ளவும், அதனை நனவாக்கவும் உதவும் உயர்ந்த ஆதரவான பணிச்சூழலை வழங்க முயற்சித்து வருகிறது.

ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனமானது, இலங்கையின் சிறந்த 100 மதிப்புமிக்க மற்றும் வலுவான வர்த்தக நாமங்கள் பற்றிய சமீபத்திய Brand Finance அறிக்கையில், வேகமாக வளர்ந்து வரும் இலங்கை வர்த்தக நாமங்களில் ஒன்றாக TOP 10 வர்த்தக நாம தரவரிசையில் நுழைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஈர்க்கக் கூடிய வர்த்தகநாம மதிப்பு வளர்ச்சியைப் பதிவுசெய்தவாறு, ‘TOP 10 அதி வேகமாக வளரும் இலங்கை வர்த்தகநாமங்களில்’ ஒன்றாகவும் இந்த வர்த்தகநாமம் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் A+ தரப்படுத்தலுடன், வர்த்தககுறியீட்டு வலிமை குறியீடு (BSI) புள்ளி 569 உடன், வர்த்தகநாம மதிப்பீட்டில் TOP 10 கௌரவப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஒரே காப்புறுதி வர்த்தகநாமமாகவும் இது விளங்குகின்றது.

பிராந்திய ரீதியான காப்புறுதித் தொழிற் துறையை, சிறந்த தீர்வுகளுடன் மாற்றியமைத்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற 3ஆவது ICC Emerging Asia Insurance Awards 2021 விருதுகள் விழாவில், 2021 ஆம் ஆண்டிற்கான ‘Best Strategies for Insurance Spreading’ (காப்புறுதி பரவலுக்கான சிறந்த மூலோபாயங்கள்) விருதை இந்த முன்னணி காப்புறுதி நிறுவனம் வென்றுள்ளது.

ஜனசக்தி சிங்கப் படையின் உறுதிப்படுத்தப்பட்ட சாதனை மற்றும் செயற்றிறன் சார்ந்த கலாசாரத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தரத்திற்கு இணையாக 100 MDRT சாதனையாளர்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனமானது, தனது ஊழியர்களை வலுவூட்டும் அதே வேளையில், சாதகமான மதிப்புமிக்க கலாசாரத்தை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் மதிப்பிடமுடியாத, நெகிழ்ச்சியான பணியிட கலாசாரம் காரணமாக, Great Workplace in Sri Lanka (இலங்கையில் சிறந்த பணியிடமாக) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருட காலப்பகுதியில், ஜனசக்தி லைஃப் நிறுவனம் காப்புறுதித் துறையில் தொடர்ச்சியாக புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், கணிப்பிடக்கூடிய ஒரு சக்தியாக முன்னோக்கி பயணித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிக கிளைகள் கொண்ட அதன் வலையமைப்பு, அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் தனித்துவமான காப்புறுதி தீர்வுகளை அணுக உதவுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *